இரண்டு சொற்கள் புணரும் பொழுது ,
1. முதலாவதாக வரும் சொல்லின் பெயர் "நிலைமொழி"
2. இரண்டாவதாக வரும் சொல்லின் பெயர் "வருமொழி"
வருமொழியின் முதலெழுத்துக் க , ச , த , ப என்று வந்தால், இரண்டு சொற்களுக்கும் இடையில் ஒற்று வரவேண்டும் என்பது அடிப்படை விதி . ஆனால் 'ஒற்று' வருமா வராதா என்பதை உறுதி செய்வது நிலைமொழியின் ஈற்று( கடைசி) எழுத்து தான்.
- எழுத்துப் புணரியல்
- வேற்றுமை
- குற்றியலுகரம்
- முற்றியலுகரம்
- அலங்கடைகள் ( exceptions)
- குறுக்கம்
- அல்வழித் தொகைச்சொல்
- மரபு மற்றும் வழக்கு
தெரிந்தால் மட்டுமே 'ஒற்று'ப் போட்டு எழுதுவதா வேண்டாமா என்று தெரியும்.
ஒரேழுத்து ஒருமொழி அடுத்து ஒற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் இலக்கண விதி இல்லை.
சரி, இணையதளத்திற்கு வருவோம். ஒற்றுப் போட்டு எழுதுவதா ? வேண்டாமா ?
இணையம் ஆகிய/என்னும் தளம்
= இணையம் + தளம் [ பண்புதொகை]
= இணைய + தளம் [ மகரக் குறுக்கம்]
= இணையதளம்
வருமொழியில் க , ச , த , ப வருகின்றது , எனவே ஒற்று வரவேண்டும் , ஆனால் ஒற்றுப் போடாமல் தான் எழுதுகின்றோம், ஏன் ?
சட்டம் + சபை = சட்டசபை
ஏன் ' சட்டச்சபை ' என்று எழுதாது, ஒற்றுப் போடாமல் எழுதுகின்றோம். அதுவே ' சட்டப்பேரவை ' என்று எழுதும்பொழுது 'ஒற்று' வருகின்றது.
பாடம் + சாலை = பாடசாலை
ஒற்றுவரவில்லை, ஆனால் ' பாடத்திட்டம் ' என்று எழுதும் பொழுது ' ஒற்று ' வருகின்றது.
நடை + பாதை = நடைபாதை
ஒற்று வரவில்லை , ' நடைப்பயிற்சி ' க்கு ஒற்று வருகின்றது.
விடை: மேலே கண்ட வருமொழிச் சொற்கள் அனைத்தும் வேறு மொழிச்சொற்கள். அவற்றை வேறுபடுத்திக் காட்டவே , இடையில் 'ஒற்று'ப் போடாமல் எழுதினர் தமிழறிஞர். இது வழக்கில் உள்ள மரபு.
தளம் - ஸ்தளம்/ஸ்தலா [ PLACE ]
சபை - சபா [ STAGE / COURT]
சாலை - ஷாலா [ HUT / SCHOOL]
பாதை - பாத் [ PATH ]
அதனால் தான், சங்கத்தமிழுக்கு ஒற்று வருகின்றது, தமிழ் சங்கத்திற்கு ஒற்று வருவதில்லை.
SUBSCRIBE here to nallatamil grammar